பொங்கல் திருநாளை முன்னிட்டு பணியாளர்களுக்கு ரூ.7 கோடி சாதனை ஊக்கத்தொகை போக்குவரத்து துறை நடவடிக்கை


பொங்கல் திருநாளை முன்னிட்டு பணியாளர்களுக்கு ரூ.7 கோடி சாதனை ஊக்கத்தொகை போக்குவரத்து துறை நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Jan 2022 6:47 PM GMT (Updated: 12 Jan 2022 6:47 PM GMT)

பொங்கல் திருநாளை முன்னிட்டு 1 லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ரூ.7 கோடியே 1 லட்சம் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

சென்னை,

தமிழகத்தில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்து சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தான் பயணிகள் எண்ணிக்கை, பஸ் பயன்பாடு, எரிபொருள் செயல்திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.

குக்கிராமம் முதல் மாநகரங்கள் உள்பட மக்கள் குடியிருக்கும் அனைத்து பகுதிகளுக்கும் தங்குதடையின்றி, போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் 1 லட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

சாதனை ஊக்கத்தொகை

பொங்கல் திருநாளையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்களில், 2021-ம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும், ஆனால் 151 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.85 வீதமும் வழங்கப்படுகிறது. அதேபோல், 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கு குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.195 வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 வீதமும் பொங்கல் பரிசாக ‘சாதனை ஊக்கத்தொகை’ வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் 1 லட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்களுக்கு, மொத்தம் ரூ.7 கோடியே 1 லட்சம் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

மேற்கண்ட தகவல்களை போக்குவரத்துத்துறை அரசு முதன்மைச்செயலாளர் டாக்டர் கே.கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.

Next Story