தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சிகள் நிறுத்தப்படாது அமைச்சர் தகவல்


தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சிகள் நிறுத்தப்படாது அமைச்சர் தகவல்
x
தினத்தந்தி 13 Jan 2022 6:50 PM GMT (Updated: 13 Jan 2022 6:50 PM GMT)

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு பயிற்சிகள் நிறுத்தப்படாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை கிண்டி கிங்ஸ் கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடினார்.

அதைத்தொடர்ந்து, அங்கிருந்த சுகாதாரப் பணியாளர்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். இதைத்தொடர்ந்து கிங்ஸ் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் சுகாதார ஊழியர்களின் போக்குவரத்து வசதிக்காக புதிய வாகனத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் சென்னை சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த 2 தனியார் பள்ளி மாணவிகள் தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மூலம் நிதி திரட்டி 7 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி கற்க உதவியாக கைபேசிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில், வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தொடர்ந்து நீட் பயிற்சி

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி தற்பொழுது நடைபெற்று வருகிறது. மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை உடனடியாக தொடங்கவும், கோவையில் எய்ம்ஸ் கல்லூரி அமைக்கவும், தமிழ்நாட்டில் 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கவும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனுவினை தமிழக முதல்-அமைச்சர் மத்திய சுகாதாரத்துறை மந்திரியிடம் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான ‘நீட்’ தேர்வு பயிற்சி நிறுத்தப்படாது. நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

75 சதவீதம் சிறுவர்களுக்கு...

24 மணி நேரமும் இயங்கும் தடுப்பூசி மையம் 61 இடங்களில் தமிழகத்தில் மட்டும் தான் உள்ளது. பொங்கல் விடுமுறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் இந்த வாரம் நடத்தப்படாது. தடுப்பூசி முகாம்கள் மூலம் இதுவரை 3 கோடியே 32 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 60 ஆயிரத்து 51 பேருக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளது. 15 முதல் 18 வயது உள்ள 75 சதவிகிதம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சைதாப்பேட்டை ஆஸ்பத்திரி

இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயணபாபு, கிங்ஸ் கொரோனா ஆஸ்பத்திரி இயக்குநர் டாக்டர் நாராயணசாமி, ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரி ‘டீன்’ டாக்டர் தேரணி ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுடன் சமத்துவப் பொங்கல் விழாவினை கொண்டாடினார். அப்போது ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் தணிகாச்சலம் உடனிருந்தார்.

Next Story