ரூ.500 கோடி கிராவல் மண் எடுத்ததாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான புகாரில் அதிகாரிகள் மீது விசாரணை


ரூ.500 கோடி கிராவல் மண் எடுத்ததாக ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான புகாரில் அதிகாரிகள் மீது விசாரணை
x
தினத்தந்தி 20 Jan 2022 9:26 PM GMT (Updated: 20 Jan 2022 9:26 PM GMT)

ரூ.500 கோடி மதிப்புள்ள கிராவல் மண்ணை எடுத்ததாக முன்னாள் துணை முதல்-அமைச்சர் மீதான புகாரில், அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த அனுமதி வழங்குவது குறித்து தமிழக அரசு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், தேனி மாவட்டத்தை சேர்ந்த ஞானராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “தேனி மாவட்டத்தில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள கிராவல் மண் சட்டவிரோதமாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக முன்னாள் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். இதுகுறித்து கடந்த 2018-ம் ஆண்டு முதல் ஏராளமான புகார்களை அரசுக்கு கொடுத்துள்ளேன். கடந்த ஆண்டு ஜூலை 21-ந்தேதி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் செய்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

அறிக்கை

இந்த வழக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த அனுமதி கேட்டு ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது என்று அரசு தரப்பு வக்கீல் கூறினார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, புகார் மீது விசாரணை நடத்தி 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

சட்டப்படி நடவடிக்கை

அப்போது போலீஸ் தரப்பில், “இந்த குற்றச்செயலில் வருவாய் துறை, புவியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வருவாய் துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த தேனி மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கிவிட்டார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் அனுமதி இன்னும் வழங்கவில்லை. அனுமதி கிடைத்ததும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதி வி.பாரதிதாசன் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

தகுந்த உத்தரவு

இந்த விவகாரம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நிலுவையில் இருந்து வருகிறது. மாவட்ட கலெக்டர் விசாரணைக்கு அனுமதி வழங்கியுள்ளார். எனவே, புலன் விசாரணை மேற்கொள்ள முன் அனுமதி கேட்டு போலீசார் அனுப்பியுள்ள ஆவணங்களை தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் பரிசீலித்து தகுந்த உத்தரவை வருகிற பிப்ரவரி மாதம் 3-ந்தேதி அல்லது அதற்கு முன்பு பிறப்பிக்க வேண்டும். இந்த வழக்கை பிப்ரவரி 4-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story