கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து உள்ளாட்சி தேர்தல்


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கடைப்பிடித்து உள்ளாட்சி தேர்தல்
x
தினத்தந்தி 22 Jan 2022 12:25 AM GMT (Updated: 22 Jan 2022 12:25 AM GMT)

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் தீவிரமாக கடைப்பிடித்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று ஐகோர்ட்டில் மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில் டாக்டர் நக்கீரன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், ‘கொரோனா வைரஸ் பரவலின் 3-வது அலை தற்போது உச்சத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவது உகந்தது அல்ல. எனவே இந்த தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இதேபோல வேறு சிலரும் வழக்கு தொடர்ந்தனர்.

அதிகரிப்பு

இந்த வழக்குகள் எல்லாம் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் எஸ்.பிரபாகரன் ஆஜராகி, ‘தற்போதைய நிலையில் தேர்தலை நடத்தினால் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் மிக மோசமான நிலையை எட்டக்கூடும். மனுதாரர் அரசியல்வாதி இல்லை. உள்நோக்கத்துடனும் அவர் வழக்கு தொடரவில்லை. டாக்டர் என்ற முறையில் வழக்கு தொடர்ந்துள்ளார்’ என்று வாதிட்டார்.

உத்தரவாதம்

அப்போது நீதிபதிகள், ‘வருகிற 27-ந் தேதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதே?’ என கேள்வி எழுப்பினர். அதற்கு வக்கீல் பிரபாகரன், ‘மாநிலத்தில் கொரோனா பரவல் நிலையை பொறுத்து தேர்தல் தொடர்பான வழக்கை விசாரிக்கலாம் என சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஐகோர்ட்டுகளுக்கு அனுமதி அளித்துள்ளது’ என்றார்.

அப்போது மாநில தேர்தல் ஆணையத்தின் தரப்பில் ஆஜரான வக்கீல் சிவசண்முகம், ‘சுப்ரீம் கோர்ட்டில் 4 மாதத்தில் தேர்தல் அறிவிப்பை வெளியிடுவதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவாதம் அளித்துள்ளது. அந்த அவகாசம் வருகிற 27-ந் தேதியுடன் முடிவடைகிறது’ என்றார்.

அரசின் கடமை

மேலும் அவர், ‘கொரோனா பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளுடன் தேர்தலை நடத்துவது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலில் கடைப்பிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் தீவிரமாக கடைப்பிடித்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும்’ என்று உத்தரவாதம் அளித்தார்.

மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ‘உள்ளாட்சி தேர்தலை நடத்துவது மட்டுமல்ல, பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதும் அரசின் கடமை ஆகும். எனவே, மக்கள் நலன் கருதி தேர்தலை தள்ளிவைக்க வேண்டும்’ என்று வாதிட்டார்.

நேரடி விசாரணை

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், ‘அனைத்து வழக்குகளும் தற்போது ஆன்லைன் வாயிலாகத்தான் விசாரிக்கப்படுகின்றன. இருந்தாலும் இந்த ஒரு வழக்கை மட்டும் நேரடியாக விசாரிக்க முடிவு செய்து, இதை வருகிற 24-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

அதையடுத்து மனுதாரர்கள் தரப்பு வக்கீல்கள், ‘அதற்குள் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுவிடும். அதனால் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க வேண்டும்’ என்றனர். ஆனால் அந்த கோரிக்கையை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.

Next Story