ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 5 மாதம் நீட்டிப்பு


ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் பதவிக்காலம் மேலும் 5 மாதம் நீட்டிப்பு
x
தினத்தந்தி 24 Jan 2022 10:57 PM GMT (Updated: 24 Jan 2022 10:57 PM GMT)

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் காலத்தை மேலும் 5 மாதத்திற்கு நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சராக இருந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் 5.12.2016 அன்று மரணமடைந்தார்.

அவரது மரணம் குறித்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதுபற்றி விசாரணை நடத்துவதற்காக சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்து 25.9.2017 அன்று அரசு உத்தரவிட்டது.

காலம் முடிந்தது

அதைத்தொடர்ந்து அந்த ஆணையத்தில் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் இந்த ஆணையத்தின் காலம் 25.7.2021 முதல் 24.1.2022 வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. அதன்படி 24-ந்தேதியுடன் (நேற்று) ஆணையத்தின் பதவிக்காலம் முடிவடைந்தது.

எனவே அதை மேலும் 5 மாதங்களுக்கு அதாவது 24.6.2022 வரை நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இதுதொடர்பாக பொதுத்துறை செயலாளர் (கூடுதல் முழு பொறுப்பு) பி.செந்தில்குமார் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நீட்டிப்பு

அப்பல்லோ ஆஸ்பத்திரி தொடர்ந்த வழக்கில், சாட்சி விசாரணை மேற்கொள்ளும்படி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே இந்த விசாரணை ஆணையத்தின் காலகட்டத்தை மேலும் 5 மாதங்களுக்கு 24.6.2022 வரை நீட்டித்து அரசு உத்தரவிட வேண்டும் என்று அரசுக்கு விசாரணை ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

அதை கவனமுடன் அரசு பரிசீலித்து, நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தின் காலத்தை 24.6.2022 வரை நீட்டித்து உத்தரவிடுகிறது. அதற்கான அறிவிப்பாணையை அரசு அரசிதழில் வெளியிடுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story