தமிழகத்தில் பரிசோதனை 6 கோடியை கடந்தது; 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா


தமிழகத்தில் பரிசோதனை 6 கோடியை கடந்தது; 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 26 Jan 2022 10:55 PM GMT (Updated: 26 Jan 2022 10:55 PM GMT)

தமிழகத்தில் பரிசோதனை எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது. 29 ஆயிரத்து 976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 41 ஆயிரத்து 762 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 17,147 ஆண்கள், 12,829 பெண்கள் என மொத்தம் 29 ஆயிரத்து 976 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 18 பேரும், 12 வயதுக்குட்பட்ட 1,033 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 4,809 பேரும் அடங்குவர். அதிகபட்சமாக சென்னையில் 5,973 பேரும், செங்கல்பட்டில் 1,883 பேரும், கோவையில் 3,740 பேரும், ஈரோட்டில் 1,302 பேரும், கன்னியாகுமரியில் 1,035 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக பெரம்பலூரில் 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

தமிழகத்தில் இதுவரை பரிசோதனை எண்ணிக்கை 6 கோடியை கடந்துள்ளது. அந்தவகையில் 6 கோடியே 24 ஆயிரத்து 712 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, இதுவரை 32 லட்சத்து 24 ஆயிரத்து 236 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 20 ஆயிரத்து 672 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 4 லட்சத்து 68 ஆயிரத்து 103 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 9 ஆயிரத்து 906 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 4 ஆயிரத்து 732 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 1,132 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

47 பேர் உயிரிழப்பு

கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 21 பேர், தனியார் ஆஸ்பத்திரியில் 26 பேர் என 47 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 23 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், திருப்பூர், தூத்துக்குடி, திருவள்ளூர், தஞ்சாவூர், ராணிப்பேட்டை, கோவையில் தலா 2 பேரும், திருச்சி, தென்காசி, மதுரை, சேலம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சியில் தலா ஒருவரும் என 14 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 24 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 359 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 27 ஆயிரத்து 507 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 8 ஆயிரத்து 693 பேரும், செங்கல்பட்டில் 2,179 பேரும், கோவையில் 3 ஆயிரத்து 740 பேரும் அடங்குவர். இதுவரையில் 29 லட்சத்து 73 ஆயிரத்து 185 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 2 லட்சத்து 13 ஆயிரத்து 692 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story