கடந்த 12 நாட்களாக தொடர் சரிவு தமிழகத்தில் 41 பேருக்கு கொரோனா


கடந்த 12 நாட்களாக தொடர் சரிவு தமிழகத்தில் 41 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 24 March 2022 11:00 PM GMT (Updated: 24 March 2022 11:00 PM GMT)

தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக தொடர்ந்து கொரோனாவில் சரிவு ஏற்பட்டு உள்ளது. நேற்று 41 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 31 ஆயிரத்து 979 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 19 ஆண்கள், 22 பெண்கள் என மொத்தம் 41 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 13 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக செங்கல்பட்டில் 6 பேரும், கன்னியாகுமரி, நீலகிரியில் தலா 3 பேரும் உள்பட 15 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல் உள்பட 22 மாவட்டங்களில் புதிதாக கொரோனாவால் யாரும் பாதிக்கப்படவில்லை.

அதேபோல், அரியலூர், மயிலாடுதுறை, கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் சிகிச்சையில் இருந்து அனைவரும் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளதால், தற்போது, இந்த 7 மாவட்டங்களும் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக மாறி உள்ளன. தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக தொற்றுகள் சரிவடைந்து 100-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது

9 முதியோர் பாதிப்பு

12 வயதுக்குட்பட்ட 15 குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட 6 முதியவர்களுக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 42 லட்சத்து 13 ஆயிரத்து 592 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 52 ஆயிரத்து 575 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 1 லட்சத்து 28 ஆயிரத்து 376 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 5 லட்சத்து 4 ஆயிரத்து 241 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 95 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 30 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழப்பு இல்லை

தமிழகத்தில் 7-வது நாளாக நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பும் இல்லை. மேலும், கொரோனா தொற்றும் பாதிப்பில் இருந்து நேற்று 71 பேர் ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 24 பேரும், செங்கல்பட்டில் 10 பேரும், கோவையில் 6 பேரும் அடங்குவர். இதுவரையில் 34 லட்சத்து 14 ஆயிரத்து 75 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 475 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story