குடும்ப தகராறில் விஷம் குடித்த கணவன்,மனைவி - போலீசார் விசாரணை...!
ஈரோடு அருகே குடும்ப தகராறில் கணவன்,மனைவி விஷம் குடித்ததில் மனைவி உயிரிழப்பு.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம், டி.என்.பாளையம் கள்ளியங்காடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 34). விவசாயம் செய்து வருகிறார்.
ஈஸ்வரனுக்கும் கொங்கர்பாளையம் பகுதியை சேர்ந்த சின்னச்சாமி மகள் சரண்யா(28) என்பவருக்கும் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கார்த்திகா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், நேற்று இரவு மழை வந்ததால் துணியை எடுத்து வீட்டிற்குள் வைக்குமாறு ஈஸ்வரன் மனைவி சரண்யாவிடம் கூறி உள்ளார். இது தொடர்பாக கணவன்,மனைவிக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.
இதில் ஆத்திரமடைந்த ஈஸ்வரன், வாழைக்கு அடிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து உள்ளார். அதை பார்த்த சரண்யாவும், அதே பூச்சி மருந்து பாட்டிலை பிடுங்கி குடித்து உள்ளார்.
இந்த நிலையில் பூச்சி மருந்து குடித்து கணவன், மனைவி இருவரும் மயங்கி கிடப்பதை பார்த்த அப்பகுதியினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே சரண்யா பரிதாபமாக உயிரிழந்தார். ஈஸ்வரன் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story