சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி கரூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

கரூர்

வழக்குப்பதிவு

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் சிவசுப்ரமணியன்(வயது 40). கூலித்தொழிலாளி. இவர் மலைக்கோவிலூர் அருகே உள்ள குடகனாறு ஆற்றுப்பாலத்தின் கீழ் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ந் தேதி ஆடு மேய்த்துக்கொண்டிருந்த 10-ம் வகுப்பு படிக்கும் சிறுமியின் வாயை பொத்தி, கைகளை கட்டி, தூக்கிச்சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நடந்த சம்பவத்தை அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் அரவக்குறிச்சி போலீசார் சிவசுப்ரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

ஆயுள் தண்டனை

இந்நிலையில் இவ்வழக்கில் நீதிபதி நசீமாபானு நேற்று தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், சிறுமியின் வாயை பொத்தி, கைகளை கட்டியதற்காக ஓராண்டு சிறை தண்டனையும், கடத்தி சென்றதற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், போக்சோவின் கீழ் ஆயுள் கால சிறை தண்டனையும், மேலும் ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.

மேலும் இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார். இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Next Story