கிணற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி


கிணற்றில் பிணமாக கிடந்த தொழிலாளி
x

வெள்ளியணையில் கிணற்றில் பிணமாக கிடந்த தொழிலாளியின் உடலை போலீசார் கைப்பற்றி அவர் எப்படி இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்

கிணற்றில் பிணம்

கரூர் மாவட்டம், வெள்ளியணை வடக்கு தெரு பகவதி அம்மன் கோவில் அருகே சாலையோரத்தில் தனியார் தோட்டத்து கிணற்றில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் வெள்ளியணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் மற்றும் கரூர் தீயணைப்புநிலைய வீரர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி அந்த ஆணின் உடலை கைப்பற்றி மேலே கொண்டு வந்தனர்.

தொழிலாளி

இதையடுத்து போலீசார் அந்த ஆணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து, விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கிணற்றில் பிணமாக கிடந்தது வெள்ளியணை தெற்கு தெருவை சேர்ந்த வேலன் (வயது 50) என்பதும், இவர் விவசாய கூலி தொழிலாளியாக அந்த பகுதியில் உள்ள தனியார் தோட்டங்களில் வேலைக்கு சென்று வந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் எதற்காக இங்கு வந்தார்? எப்படி கிணற்றில் விழுந்து இறந்தார்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story