தமிழகத்தில் உள்ள 27 பெரிய அம்மன் கோவில்களில் ஆடி மாத திருவிழா - அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்


தமிழகத்தில் உள்ள 27 பெரிய அம்மன் கோவில்களில் ஆடி மாத திருவிழா - அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்
x

தமிழகத்தில் உள்ள 27 பெரிய அம்மன் கோவில்களில் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அமைச்சர் பி.கே. சேகர்பாபு கூறினார்.

சென்னை:

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி சென்னை, நுங்கம்பாக்கத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அலுவலகத்தில் வரவிருக்கும் ஆடி மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 27 பெரிய அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் கோவில்களான மயிலாப்பூர் முண்டக்கண்ணி அம்மன் கோவில், மாங்காடு, காமாட்சியம்மன் கோவில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில், காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில், பண்ணாரி மாரியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருச்சி மாவட்டம், உறையூர், வெக்காளியம்மன் கோவில், விருதுநகர் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட 27 பெரிய அம்மன் கோவில்களில் பக்தர்களின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த கூடுதல் வசதிகள் செய்யப்படும்.

ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலிருந்து பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு ஆண்டு தோறும் அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நோய்தொற்று காரணமாக ஆடி மாத திருவிழா நடைபெறவில்லை. இந்த வருடம் பக்தர்களின் கூட்டத்தை கருத்தில் கொண்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர்வசதி, கழிப்பிட வசதி, பக்தர்கள் வரிசையில் செல்ல வசதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைத்து தரப்படும்.

சிறப்பு திருவிழாக்களான ஆடிபெருக்கு, ஆடிவெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப்பூரம் மற்றும் வார இறுதி நாட்களில் கூடுதல் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு அந்தந்த கோவில் சார்பாக கண்காணிக்கப்படுவார்கள்.

தற்காலிகமாக முதலுதவி மருத்துவ மையங்கள் ஏற்படுத்தப்படும். கோவில்களில் திருவிழா நேரத்தில் பொதுமக்களுடைய பாதுகாப்பு, கொரோனா வழிகாட்டு நெறிமுறை பின்பற்றி, சமூக இடைவெளி கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் கமிஷனர் (விசாரணை) ந.திருமகள் மற்றும் உயர்மட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர் தேச மங்கையர்கரசி மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.


Next Story