விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை


விஜயதசமியையொட்டி வித்யாரம்பம் எழுத வைத்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.

பெரம்பலூர்

விஜயதசமி தினத்தன்று குழந்தைகளை பள்ளியில் சேர்த்தால் சிறந்த கல்வியை தடையின்றி பெற முடியும் என்கிற நம்பிக்கை மக்களிடம் உள்ளது. இதற்காகவே கல்வி ஆண்டு தொடக்கமான ஜூன் மாதம் பள்ளியில் சேர்ப்பதற்குரிய வயதை எட்டி இருந்தாலும் தங்கள் குழந்தைகளை விஜயதசமி தினம் வரும் வரை காத்திருக்க வைப்பது வழக்கமாக உள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல பள்ளிகளில் விஜயதசமி தினமான நேற்று மாணவர் சேர்க்கை நடைபெற்றது. பல தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் தங்களது குழந்தைகளை அழைத்து வந்தனர். அப்போது பெற்றோர் தங்களது குழந்தையின் கை விரலை பிடித்து, தட்டில் பரப்பி வைக்கப்பட்டிருந்த நெல்லின் மேல் தமிழ் மொழியின் முதல் எழுத்தான 'அ' என்ற எழுத்தை எழுதி பழகி கொடுத்தனர். பின்னர் அந்த மாணவ-மாணவிகளை பள்ளிகளில் சேர்த்துக்கொண்டனர். இதற்காக விடுமுறை நாள் என்றாலும் நேற்று பல பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டு இருந்தன.

இதேபோல் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளிலும் விஜயதசமியையொட்டி மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதேபோல் அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகள் சேர்க்கை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Next Story