விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் - தமிழக அரசு பதில்


விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் - தமிழக அரசு பதில்
x
தினத்தந்தி 11 Aug 2023 11:41 AM GMT (Updated: 11 Aug 2023 12:11 PM GMT)

மதுபானம் பரிமாறுவது குறித்த சட்ட திருத்தங்கள் வரும் கூட்டத்தொடரில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்தது

சென்னை,

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை எதிர்த்து சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் கே.பாலு சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு , தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, இந்த வழக்கில் இடைக்கால தடை, சட்ட திருத்த விதிகளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய தடையாக இருக்காது' எனத் தெரிவித்த நீதிபதிகள்,சட்ட திருத்த விதிகள் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதா? என விளக்கமளிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 11-க்கு தள்ளி வைத்தனர்.

இந்தநிலையில் இது தொடர்பான விசாரணை இன்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது , சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானம் பரிமாறுவது குறித்த திருத்தங்கள் வரும் கூட்டத்தொடரில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தமிழக அரசு தகவல் தெரிவித்தது. தொடர்ந்து சட்ட திருத்தங்களை எதிர்த்து வழக்கறிஞர் கே.பாலு தொடர்ந்த வழக்கு விசாரணையை அக்டோபர் 9-ம் தேதிக்கு தள்ளி வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது .


Next Story