தாட்கோ சார்பில்நிலம் வாங்கி விவசாயத்தில்வருமானம் பெற விண்ணப்பிக்கலாம்


தாட்கோ சார்பில்நிலம் வாங்கி விவசாயத்தில்வருமானம் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 26 Sep 2023 7:30 PM GMT (Updated: 26 Sep 2023 7:31 PM GMT)

தாட்கோ சார்பில் நிலம் வாங்கி விவசாயத்தில் வருமானம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி:

தாட்கோ சார்பில் விவசாய நிலம் வாங்கி, விவசாயத்தில் வருமானம் ஈட்ட விண்ணப்பிக்கலாம் என்று ஆதிதிராவிடர்களுக்கு கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறப்பு திட்டங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மற்றவர்களுக்கு இணையாக வாழ வழி செய்யும் வகையில் அரசு தாட்கோ மூலமாக பல்வேறு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 2022-23-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலை மேன்மையடைய, சொந்தமாக விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பு விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்குவதற்கான திட்டத்தை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பின்படி இந்த ஆண்டு 200 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரைச் சார்ந்த விவசாயத் தொழில் செய்பவர்களில் நில உடமைகளை அதிகரிக்கும் பொருட்டு, பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக விவசாய நிலம் வாங்கி, விவசாயத்தில் வருவாய் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

தகுதிகள்

இத்திட்டத்தில் விண்ணப்பம் செய்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரைச் சார்ந்த 18 வயது முதல் 65 வயதிற்குட்பட்டவர்களாகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நிலம் வாங்க உத்தேசித்துள்ள நிலம் 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலத்திற்குள் இருக்கலாம். மற்றும் நிலத்தின் சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிக பட்சமாக ரூ.5 லட்சம் ஒரு பயனாளிக்கு இத்திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும். நிலம் விற்பனை செய்பவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அல்லாத இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

மேலும், வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயனயடைய www.tahdco.comஎன்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் அடையலாம்.

மின் இணைப்பு திட்டம்

மேலும், தாட்கோவில் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் நிலம் வாங்குதல், நிலம் மேம்படுத்துதல் மற்றும் துரித மின் இணைப்புத் திட்டம் ஆகிய விவசாயம் சார்ந்த திட்டங்களுக்கு மானியம் பெற்று பயனடைந்த பயனாளிகளும், தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமையால் செயல்படுத்தப்படும் நுண்ணீர் பாசனம் "ஒரு துளி அதிகப்பயிர்" திட்டத்திலும் பயனடையலாம். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு விவசாய பெருமக்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் தோட்டக்கலை துறையினை அணுகலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story