வெடி விபத்தில் 2 பேர் பலியான வழக்கில்பட்டாசு ஆலை உரிமையாளர் கைது
பாப்பாரப்பட்டி:
பாப்பாரப்பட்டி அருகே வெடி விபத்தில் 2 பேர் பலியான சம்பவத்தில் பட்டாசு ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
2 பேர் பலி
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் தாலுகா நாகதாசம்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியார் பட்டாசு தயாரிக்கும் ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் நாகதாசம்பட்டி கிராமத்தை சேர்ந்த முனியம்மாள் (வயது 65), சேலம் மாவட்டம் மேச்சேரியை சேர்ந்த பழனிம்மாள் (50) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுதொடர்பாக பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சரவணன் என்பவரை பாப்பாரப்பட்டி போலீசார் தேடி வந்தனர்.
சிறையில் அடைப்பு
இந்த நிலையில் நேற்று காலை பாப்பாரப்பட்டி மெயின் ரோட்டில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர் சரவணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் பென்னாகரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.