குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் - வைகோ வலியுறுத்தல்


குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
x

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர், தனியார் முகவரிடம் ரூ.1½ லட்சம் பணம் கொடுத்து, கடந்த 3-ந் தேதி குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்றுள்ளார். குவைத் நாட்டுக்குச் சென்ற முத்துக்குமரனுக்கு உரிய பணி கொடுக்காமல், ஒட்டகம் மேய்க்கக் கூறி உள்ளனர். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி, தனது குடும்பத்தினரிடம் தான் ஏமாற்றப்பட்டுள்ளதாக கதறி உள்ளார்.

இடைத்தரகர் மூலமும், இந்தியத் தூதரகம் மூலமும் தாயகம் திரும்புவதற்கு அவர் முயற்சித்துக் கொண்டு இருந்த வேளையில், கடந்த 7-ந் தேதி புதன்கிழமை முத்துக்குமரன் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி குடும்பத்தினருக்குக் கிடைத்துள்ளது. முத்துக்குமரன் பணி செய்த குவைத் நாட்டைச் சேர்ந்தவர்தான் அவரைச் சுட்டுக் கொன்றிருப்பதாக தகவல் கிடைத்து, அவரது மனைவியும், குடும்பத்தினரும் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய வெளியுறவுத்துறை இதில் உடனடியாகத் தலையிட்டு, குவைத் நாட்டிற்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், முத்துக்குமரன் உடலை அவரது சொந்த ஊருக்குக் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், குவைத் நாட்டிடமிருந்து முத்துக்குமரன் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு பெற்றுத் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story