டேன்டீ நிறுவனத்தை ஏற்று நடத்த மத்திய அரசு தயார் - பாஜக தலைவர் அண்ணாமலை


டேன்டீ நிறுவனத்தை ஏற்று நடத்த மத்திய அரசு தயார் - பாஜக தலைவர் அண்ணாமலை
x

டேன்டீ நிறுவனத்தை ஏற்று நடத்த மத்திய அரசு தயார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கூடலூரில் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்றுள்ளார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:-

30 ஆண்டு காலமாக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. 250 ரூபாயில் ஒரு மனிதன் எப்படி இலங்கை தோட்டத்திலே வசிக்க முடியும்? இன்னமும் அவர்களுக்கு அந்த கொடூரம் நடந்து கொண்டிருக்கிறது. அதனால்தான், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பதவியேற்ற உடனே அங்கு வசிக்கும் மலைவாழ் தமிழர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்தார்.

வடக்குப் பகுதியில் இருக்கின்ற தமிழர்களுக்கு 50 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்தார். இதையெல்லாம் செய்து கொடுத்த பிரதமர் மோடியின் கட்சியிலிருந்து நாங்கள் பேசுகிறோம். பேசுவதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது.

இப்போதும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சொல்வது, டேன்டீ வேண்டாம் என்று சொல்லுங்கள். நாங்கள் அதை எடுத்துக் கொள்கிறோம். அது எங்களுடைய பொறுப்பு. எழுத்துப்பூர்வமாக தமிழக முதல்வர் டேன்டீ எங்களுக்கு வேண்டாம். இந்த 5315 ஏக்கரை மத்திய அரசே எடுத்துக் கொள்ளுங்கள், மத்திய அரசே இந்த நிறுவனத்தை நடத்துங்கள் என்று எழுதி தந்தால், நாங்கள் தயார். டேன்டீயை மத்திய அரசு எடுத்து நடத்துவதற்கு நாங்கள் தயார் என்று கூறினார்.

மேலும் இலங்கையிலிருந்து மீண்டும் தமிழகம் வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலைவாழ் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக திராவிடக் கட்சிகள் நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் பிரதமர் அண்டை நாட்டில் வசிக்கும் தமிழர்களுக்கு 60 ஆயிரம் வீடுகளைக் கட்டி கொடுத்துள்ளார்.

எந்த ஒரு கட்சியிலே அடிப்படையாக இருக்கிற சுய ஒழுக்கம் இல்லையே அந்த கட்சி ரொம்ப நாள் நீடிக்காது. திமுகவின் முடிவுரை ஒவ்வொரு நாளும் எழுதப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story