அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல்: சட்டப்பேரவையில் காரசார விவாதம்


அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த மோதல்:  சட்டப்பேரவையில் காரசார விவாதம்
x
தினத்தந்தி 20 April 2023 8:56 AM GMT (Updated: 20 April 2023 9:45 AM GMT)

அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே பேரவையில் காரசாரமான வாதம் நடைபெற்றது.

சென்னை,

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன்படி, இன்று (ஏப்.20) காலை கேள்வி நேரத்துடன் சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கின. இதனைத் தொடர்ந்து, காவல் துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது, கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் ஓபிஎஸ், இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது.

அதிமுக அலுவலகம் தாக்கப்பட்டது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே பேரவையில் காரசாரமான வாதம் நடைபெற்றது.

அதிமுக அலுவலகத்தில் வன்முறை நடந்தபோது கை கட்டி வேடிக்கை பார்த்தது காவல்துறை - பொள்ளாச்சி ஜெயராமன்.

எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தாக்குதல் நடத்தக்கூடும் என முன்கூட்டியே புகார் அளித்தும் தகுந்த பாதுகாப்பு வழங்கவில்லை. அதிமுக அலுவலகத்தை சிலர் திட்டமிட்டு தாக்க முயன்றனர். உரிய பாதுகாப்பு கேட்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு இல்லாததால் இந்த நிலைமை ஏற்பட்டது - எடப்பாடி பழனிசாமி.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாராளமாக குறைகளை சொல்லுங்கள், ஆனால் ஆதாரத்துடன் சொல்லுங்கள், அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்போம்.

எதாவது தவறுகள் நடந்திருந்தால் தான் காவலர்கள் மாற்றப்படுவார்கள்; தூக்கியடிப்பது, பழிவாங்குவது, அரசியல் ரீதியாக செயல்படுவது எல்லாம் இந்த ஆட்சியில் நடக்காது, வேண்டுமென்று திட்டமிட்டு எந்த அதிகாரிகளையும் மாற்றவில்லை என்பதை மீண்டும், மீண்டும் சொல்கிறேன்.

இது உட்கட்சி விவகாரம், பாதுகாப்பு கேட்ட நேரத்தில் பாதுகாப்பு கொடுத்தோம். அலுவலகத்திற்குள் நடந்த சம்பவத்திற்கு நாங்கள் பொறுப்பாக முடியாது. இச்சம்பவம் தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "யார் அத்து மீறியது என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது காவல் துறை பொறுப்பு. யார் வெறியாட்டம் நடத்தினார்கள் என்பதை தனி மேடை போட்டு கூட பேசத் தயாராக இருக்கிறேன். இந்த பிரச்சினை வேறு திசையை நோக்கி செல்கிறது. இச்சம்பவம் வேதனை அளிக்கிறது. வன்முறையாளர்கள் யார் என விசாரிக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது என்றார்.

திமுக இரண்டாக உடைந்தபோது திமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளித்தது அதிமுக அரசு - எடப்பாடி பழனிசாமி

திமுகவில் பிரச்சினை ஏற்பட்டபோது நாங்கள் அடித்துக்கொள்ளவில்லை, ரகளையில் ஈடுபடவில்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

அதிமுக அலுவலகத்தில் நடந்த சம்பவம் விரும்பதாக சம்பவம், நாங்கள் அன்று நிராயுதபாணியாக நின்றோம். காவல்துறை விசாரித்து வன்முறை வெறியாட்டங்களை ஏற்படுத்தியது யார் என்பதை மக்களுக்கு விளக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம்

யார் அலுவலகத்தை தாக்கினார்கள் என்பது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது. யார் அலுவலகத்தில் இருந்து பொருட்களை திருடிச்சென்றது என்பது தமிழக மக்களுக்கு தெரியும் - எடப்பாடி பழனிசாமி.


Next Story