சார்பதிவாளர் அலுவலக கிராமங்களின் எல்லை மறுசீரமைப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் இன்று கள்ளக்குறிச்சியில் நடக்கிறது


சார்பதிவாளர் அலுவலக    கிராமங்களின் எல்லை மறுசீரமைப்பு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்    கலெக்டர் தலைமையில் இன்று கள்ளக்குறிச்சியில் நடக்கிறது
x
தினத்தந்தி 25 Oct 2022 6:45 PM GMT (Updated: 25 Oct 2022 6:45 PM GMT)

சார்பதிவாளர் அலுவலக கிராமங்களின் எல்லைகள் மறுசீரமைப்பு செய்வது தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் தலைமையில் இன்று நடக்கிறது.

கள்ளக்குறிச்சி


இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

எல்லைகள் மறுசீரமைப்பு

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசாணையின்படி சார் பதிவாளர் அலுவலக நிர்வாக எல்லைக்குட்பட்ட கிராமங்களை மறு சீரமைத்தல் தொடர்பான பதிவுத்துறைத்தலைவருக்கு நிர்வாக அனுமதி வழங்கி ஆணையிடப்பட்டது. அதன்தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி பதிவு மாவட்டத்தை சேர்ந்த 10 சார் பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் விருத்தாசலம் பதிவு மாவட்டத்தை சேர்ந்த உளுந்தூர்பேட்டை சார்பதிவாளர் அலுவலகம், விழுப்புரம் பதிவு மாவட்டத்தை சேர்ந்த திருக்கோவிலூர் சார் பதிவாளர் அலுவலகம் என மொத்தம் 12 சார்பதிவாளர் அலுவலக கிராமங்களின் எல்லைகளை மறுசீரமைப்பது தொடர்பாகவும், கல்வராயன்மலை தாலுகா மற்றும் புதியதாக ஆரம்பிக்கப்படவுள்ள வானாபுரம் தாலுகாவில் புதிதாக ஒரு சார்பதிவாளர் அலுவலகம் அமைப்பது தொடர்பாகவும் கருத்துரு தயாரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் கருத்து கேட்பு

மேலும் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும் வருவாய் கிராமங்களின் விவரங்கள் கடலூர் மண்டல துணைப்பதிவுத்துறை தலைவர் அலுவலகம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம் மற்றும் விழுப்புரம் மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்கள், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய தாலுகா அலுவலகங்களின் விளம்பர பலகைகளில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இது தொடர்பாக இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெறஉள்ளது. கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவிக்கலாம். இவ்வாறு மேற்கண்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story