ஒரேநாளில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரேநாளில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

கரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரூர்

தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து இருந்த நிலையில் தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகளும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால், தொற்றில் இருந்து பாதுகாக்கவும், மீண்டும் பரவி வரும் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள தகுதி வாய்ந்த அனைத்து பொதுமக்களுக்கும் தடுப்பூசி எளிதில் கிடைத்திடும் வகையில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்த தமிழக அரசால் உத்தரவிடப்பட்டிருந்தது.

37 ஆயிரம் பேர்

அந்தவகையில் நேற்று கரூர் மாவட்டத்தில் 33-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் 1,607 மையங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசியினை 3 ஆயிரத்து 176 பேரும், 2-வது தவணை தடுப்பூசியினை 8 ஆயிரத்து 402 பேரும், பூஸ்டர் தடுப்பூசியினை 25 ஆயிரத்து 548 பேரும் என மொத்தம் 37 ஆயிரத்து 126 பேர் செலுத்தியுள்ளனர்.கரூர் மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசியினை 8 லட்சத்து 30 ஆயிரத்து 766 பேர் செலுத்தியுள்ளனர். இது 97.32 சதவீதமாகும். 2-வது தவணை தடுப்பூசியினை 8 லட்சத்து 24 ஆயிரத்து 045 பேர் செலுத்தியுள்ளனர். இது 96.54 சதவீதமாகும்.

நொய்யல்

கரூர் மாவட்டம் நொய்யல் ஈ.வே.ரா. பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, குளத்துப்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளி, வேட்டமங்கலம் அரசு தொடக்கப்பள்ளி, குந்தாணி பாளையம் அரசு தொடக்கப்பள்ளி, சேமங்கி அரசு தொடக்கப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் அனிதா தலைமையில் மருத்துவக்குழுவினர் கலந்து கொண்டு 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசியும், பூஸ்டர் தடுப்பூசியும் போட்டனர்.


Next Story