மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அரசு ஆஸ்பத்திரி கட்டிடம் கட்டுவதாக வழக்கில் மதுரை கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை

மதுரையை சேர்ந்த மாதவன், சோனை முத்து, தட்சிணாமூர்த்தி ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை சின்ன அனுப்பானடி பகுதியில் 400 ஆண்டுகள் பழமையான மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவிலாகும். இந்த கோவில் அருகிலேயே அதற்கு சொந்தமான நிலமும் உள்ளது.

இந்த நிலத்தை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் ஒரு தரப்பினர் ஆக்கிரமித்தனர். இது சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணை முடிவில் அந்த சொத்துகள் கோவிலுக்கு சொந்தமானது என தீர்ப்பளிக்கப்பட்டது.

அந்த பகுதியில் உள்ள கோவில் ஊருணியை ஆக்கிரமித்து அரசு ஆஸ்பத்திரி விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ஊராட்சி அலுவலகம், வி.ஏ.ஓ. அலுவலகம், ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையம், தண்ணீர் தொட்டி என பல அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறையிடம் புகார் அளித்தும் பலன் இல்லை.எனவே குருநாதசுவாமி கோவில் நிலத்தில் கட்டப்பட்டு வரும் ஆஸ்பத்திரி கட்டிடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கீழ் கோர்ட்டு உத்தரவை மீறி அரசு ஆஸ்பத்திரி கட்டிடங்கள் விரிவாக்கம் செய்வது குறித்து மதுரை மாவட்ட கலெக்டர் மாநகராட்சி கமிஷனர் ஆசிரியர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை ஏப்ரல் மாதம் 5-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Related Tags :
Next Story