பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவி, துருவி விசாரணை


பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவி, துருவி விசாரணை
x

கனியாமூரில் மாணவி ஸ்ரீமதி இறந்த வழக்கில் கைதான பள்ளி தாளாளர் உள்பட 5 பேரை காவலில் எடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் பெற்றோர், தங்கள் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது சாவுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாணவி ஸ்ரீமதியின் தாய் செல்வி கொடுத்த புகாரின்பேரில் சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 5 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

இந்நிலையில் இவ்வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி நேற்று முன்தினம் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் அரசு வக்கீல் வைத்தியநாதன், விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதற்காக சேலம் மத்திய சிறையில் இருக்கும் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், பலத்த பாதுகாப்புடன் வேனில் விழுப்புரம் அழைத்து வந்து தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனிடையே இந்த மனு மீதான விசாரணை பகல் 12.30 மணிக்கு நடைபெற்றது. மனுவை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்கும்படி சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு அனுமதி வழங்கியதோடு, அந்த விசாரணை முடிந்து மீண்டும் நாளை (அதாவது இன்று) பகல் 12.30 மணிக்குள் கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படியும் உத்தரவிட்டார்.

5 பேரிடம் துருவி, துருவி விசாரணை

இதையடுத்து விழுப்புரம் கோர்ட்டில் இருந்து ரவிக்குமார் உள்பட 5 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் அவர்களை விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து வந்து துருவி, துருவி விசாரணை நடத்தினர்.

அப்போது போலீசார் அவர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விவரங்களை சேகரித்தனர்.

பதில் அளிக்க முடியாமல் திணறல்

விடுதி அறையில் இருந்து மாணவி எந்த நேரத்திற்கு வெளியே சென்றார், அவர் வெளியே சென்றதை யாரேனும் பார்த்தார்களா? பள்ளியின் 3-வது மாடியில் ஏன் சி.சி.டி.வி. கேமரா பொருத்தப்படவில்லை? ஸ்ரீமதி எழுதியதாக சமூக வலைதளங்களில் வெளியான கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடி ஆசிரியர்கள் யாரேனும் அவரை டார்ச்சர் செய்தனரா? என்று கிடுக்கிப்பிடியாக அவர்களிடம் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் கேட்ட கேள்விகளுக்கு அவர்கள் 5 பேரும் பதில் அளித்தனர். ஒரு சில கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறியதாகவும் தகவல் வெளியாகியது.

இந்த விசாரணை முடிந்து இன்று பகல் 12.30 மணியளவில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.


Next Story