கன்னியாகுமரியில் அலை மோதிய சுற்றுலா பயணிகளின் கூட்டம் - போலீசார் தீவிர கண்காணிப்பு


கன்னியாகுமரியில் அலை மோதிய சுற்றுலா பயணிகளின் கூட்டம் - போலீசார் தீவிர கண்காணிப்பு
x

கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி,

உலக புகழ் பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதிலும், விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

இந்நிலையில் இன்று விடுமுறை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை அதிகாலையில் சூரிய உதயமான காட்சியை கண்டு களித்தனர்.

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.பின்னர் கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட காலை 7 மணியிலிருந்து சுற்றுலா பயணிகள் படகு துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் படகில் ஆர்வத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டு மகிழ்ந்தனர்.

மேலும், கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உட்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.


Next Story