தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டம் நடத்த உரிமையில்லை-இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் முத்தரசன் பேச்சு


தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டம் நடத்த உரிமையில்லை-இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் முத்தரசன் பேச்சு
x

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டம் நடத்த உரிமையில்லை என்று காரைக்குடியில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் முத்தரசன் கூறினார்.

சிவகங்கை

காரைக்குடி, -

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜனதாவினர் போராட்டம் நடத்த உரிமையில்லை என்று காரைக்குடியில் நடந்த இந்திய கம்யூனிஸ்டு மாநாட்டில் முத்தரசன் கூறினார்.

மாவட்ட மாநாடு

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிவகங்கை மாவட்ட மாநாடு காரைக்குடியில் நடைபெற்றது. அதனையொட்டி பேரணியும், பொது கூட்டமும் நடைபெற்றது. பாண்டியன் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கண்ணகி தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.குணசேகரன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சாத்தையா வரவேற்றார். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-

பா.ஜனதாவுக்கு உரிமையில்லை

தி.மு.க. தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என கூறி பாரதீய ஜனதா கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் தான் ஆகிறது. அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார்கள். மற்ற வாக்குறுதிகளையும் நிறைவேற்ற இன்னும் அவர்களுக்கு கால அவகாசம் உள்ளது. வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் வலியுறுத்தும்.

ஆனால் 2014-ல் நடைபெற்ற தேர்தலில் மோடி தேர்தல் வாக்குறுதியாக கருப்பு பணத்தை ஒழித்து ஒவ்வொரு குடிமகன் கணக்கிலும் ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் வரவு வைப்பேன். ஆண்டுக்கு ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்று பல்வேறு வாக்குறுதிகள் கூறினார். 8 ஆண்டுகள் கடந்து விட்டது. பா.ஜனதா வாக்குறுதிகள் என்ன ஆனது? மத்திய அரசின் காலி பணியிடங்கள் கூட நிரப்ப மறுக்கின்றனர்.

வேலை இல்லா திண்டாட்டம்

இந்தியாவில் விலைவாசிகள் விண்ணை முட்டுகிறது. வேலையில்லா திண்டாட்டம் பெருகுகிறது. இலங்கையில் நடந்தது போல இந்தியாவிலும் நடக்கும் சூழ்நிலையை உருவாக்கி விடாதீர்கள்.

திருப்பூரில் ஆகஸ்டு 9-ந்தேதி மாநில மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் சந்தானம், முன்னாள் எம்.பி. லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.தங்கமணி, ஏ.ஐ.டி.யூ.சி. மாநில துணைச்செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன், நகர செயலாளர் ஏ.ஆர். சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story