போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தி.மு.க. நிர்வாகிகளே ரகளை செய்வதுதான் திராவிட மாடல்-பிரேமலதா விஜயகாந்த் காட்டம்


போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து தி.மு.க. நிர்வாகிகளே ரகளை செய்வதுதான் திராவிட மாடல்-பிரேமலதா விஜயகாந்த் காட்டம்
x

சொந்த கட்சி நிர்வாகிகளே போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து ரகளை செய்வது தான் திராவிட மாடல் என பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டினார்.

புதுக்கோட்டை

ஆவின் பால் தட்டுப்பாடு

தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆவின் பால் பிரச்சினைக்கு எதிர்க்கட்சி மேல் பழியை போடாமல் அமைச்சர் நாசர் மற்றும் தமிழக அரசு தான் விவசாயிகள் பிரச்சினையை தீர்த்து ஆவின் பால் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்திற்கு தே.மு.தி.க.வின் ஆதரவு உண்டு. சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.

'நீட்' தேர்வு ரத்து ரகசியம்

தேர்தல் நேரத்தில் 'நீட்' தேர்வு ரத்து ரகசியம் எங்களுக்கு தெரியும் என்று கூறிய உதயநிதி தற்போது அனிதா பெயரில் மருத்துவமனை பெயர் பலகை திறந்தால் போதும் என்று நினைக்கிறார். இது கண்டனத்துக்குரியது. அகில இந்திய அளவில் 'நீட்' தேர்வு ஆதரவு இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் ரத்து செய்ய முடியுமா? என்பது கேள்விக்குறி தான்.

'நீட்' தேர்வை வைத்து அரசியல் செய்யாமல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை குழப்பாமல் தமிழக அரசு 'நீட்' பிரச்சினையில் நிலையான தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட பயந்து பல கட்சிகள் இருந்தபோது தைரியமாக தே.மு.தி.க. போட்டியிட்டது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேர்தலே கிடையாது. இதுவரை தமிழகத்தில் நடந்த இடைத்தேர்தலில் மிஞ்சும் அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளது. தே.மு.தி.க. எவ்வளவோ இடைத்தேர்தலை சந்தித்துள்ளது. ஆனால் இதுபோன்ற இடைத்தேர்தலை நாங்கள் பார்த்தது இல்லை. மக்களை ஆடு, மாடுகள் போல் பட்டியில் அடைத்து வைத்து கோடி கோடியாக பணம் செலவழித்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்க வைத்துள்ளனர்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதை கேள்விப்படும் போது மனது வருத்தமாக உள்ளது. நான் தேர்தலில் போட்டியிடவில்லை. எனது உடல்நிலை சரியில்லை என்று அவர் கூறிய போதும் வம்படியாக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தேர்தலில் நிற்க வைத்து உள்ளனர்.

திராவிட மாடல்

தி.மு.க. கட்சி நிர்வாகிகளே போலீஸ் நிலையத்திற்குள் புகுந்து அடித்து நொறுக்குவது, சொந்த கட்சி எம்.பி. வீட்டையே தாக்குதலுக்கு உள்ளாக்குவது தான் திராவிட மாடல். கருணாநிதி உயிரோடு இருந்திருந்தால் இதுபோன்ற சம்பவம் நடந்திருக்குமா?. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் கூற வேண்டும்.

அ.தி.மு.க. பிளவுபட்டு இருப்பது கட்சியை பலவீனப்படுத்தும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே தி.மு.க.வை வீழ்த்த முடியும். ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு அ.தி.மு.க.- பா.ஜனதா விமர்சனம் செய்து கொள்வது அவர்களது வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.

மக்கள் மத்தியில் தேர்தல் குறித்து நம்பகத்தன்மை குறைந்து வருவது போல் மாணவர்கள் மத்தியில் தேர்வு குறித்த நம்பகத்தன்மை குறைந்து வருவதால் தான் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வில் 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுத வராமல் உள்ளனர். அரசு 100 சதவீத மாணவர்கள் தேர்வு எழுதுவதற்குண்டான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story