லாரி மோதி டிரைவர் பலி


லாரி மோதி டிரைவர் பலி
x

செம்பட்டி அருகே மினி வேன் மீது லாரி மோதி டிைரவர் பலியானார். அந்த மினி வேனில் இருந்த மாடும் பரிதாபமாக இறந்தது.

திண்டுக்கல்

தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த மணிகண்டன் மகன் மனோஜ் (வயது 24). இவர் தனக்கு சொந்தமான மாட்டை திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். இதையடுத்து அந்த மாட்டை திண்டுக்கல்லுக்கு சென்று விடுவதற்காக அவர் மினி வேன் ஒன்றை ஏற்பாடு செய்தார். அதன்படி, மினி வேனில் மனோஜ், தனது மாட்டை அழைத்து கொண்டு வந்தார். உடன் உறவினரான அதே ஊரை சேர்ந்த குமரேசன் மகன் அனீஸ்குமார் (15) வந்தார். மினி வேனை கம்பத்தை சேர்ந்த அஜித்குமார் (20) ஓட்டினார். வேனின் முன்பகுதியில் மனோஜ், அனீஸ்குமார் இருந்தனர். பின்பகுதியில் மாடு கட்டப்பட்டிருந்தது. இந்தநிலையில் மினி வேன் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே ஆதிலட்சுமிபுரம் என்ற இடத்தில் வந்தபோது, எதிரே தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நூல் பண்டல் ஏற்றிக்கொண்டு தேனி நோக்கி லாரி ஒன்று வந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மினி வேன் மீது லாரி பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் மினி வேனில் வந்த மாடு சம்பவ இடத்திலேயே பலியானது. மேலும் வேனில் வந்த அஜித்குமார், மனோஜ், அனீஸ்குமார் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அஜித்குமார் உயிரிழந்தார். மனோஜ் மற்றும் அனீஸ்குமாருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story