ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் அதிமுகவுக்கு வரலாம் - செல்லூர் ராஜூ பேட்டி


ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் அதிமுகவுக்கு வரலாம் - செல்லூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 22 July 2022 8:11 AM GMT (Updated: 22 July 2022 8:16 AM GMT)

எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றால் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவுக்கு வரலாம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

மதுரை,

மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோவில் பாப்பாகுடி சிக்கந்தர் சாவடி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி கூடுதல் கட்டிடங்களை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:-

திமுக ஆட்சியில் மக்கள் அனைவரும் கடும் அதிருப்தியில் உள்ளனர் வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக மக்களிடம் வாக்கு கேட்காமலே அமோக வெற்றி பெறும் அந்த அளவுக்கு திமுக மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அரசு விழாவில் அதிகாரியை மிரட்டுகிறார் இதற்கு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் இதுவரை வாய் திறக்கவில்லை.

திமுக ஆட்சியில் அதிகாரிகளை மிரட்டும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனை அதிமுக சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் .

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றத்தை எடுத்து அதிமுக சிறப்பாக செயல்பட்டு வருகிறது ஒற்றை தலைமை வேண்டும் இரட்டை குதிரையில் சவாரி செய்தால் அதிமுகவின் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்படும் என்று அனைத்து நிர்வாகிகளும் ஒரு சேர முடிவெடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக ஆக்கி உள்ளோம்.

என்னை பொறுத்தவரை இந்த கட்சியில் இருந்து ஒரு தொண்டனும் வெளியே செல்லக்கூடாது புரட்சித்தலைவி ஜெயலலிதாவை காளிமுத்து பேசாத பேச்சா அது போல பண்ருட்டி ராமச்சந்திரன் திருநாவுக்கரசு கண்ணப்பன் ஆர் எம் வீரப்பன் போன்றவர்களும் கடுமையாக விமர்சனம் செய்தார்கள் ஆனால் புரட்சித்தலைவி அம்மா அவர்களையும் ஏற்றுக்கொண்டு கழகத்தில் பதவிகளை வழங்கினார்.

அதுபோல தற்போது அதிமுகவை விட்டு விலகி இருக்கும் ஓ பன்னீர்செல்வம் போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளராக ஏற்றுக்கொண்டால் மீண்டும் அதிமுகவில் இணைந்து பணியாற்றுவது குறித்து பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுப்பார்.

கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் ஏற்படுத்தக்கூடிய உடன்பாடாகும் அதிமுக கூட்டணியைபொறுத்த வரை அந்தக் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் கேட்கும் தொகுதி எண்ணிக்கையை பொருத்து அந்த நேரத்தில் முடிவு செய்யப்பட்டு எங்கள் கூட்டணியில் எந்த கட்சிகள் இடம் பெறும் என்பது முடிவு செய்யப்படும்.

வருகிற 25-ம் தேதி மின் கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினருடன் சேர்ந்து பொதுமக்களும் திரளாக பங்கேற்று இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைய செய்ய வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story