அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதி


அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதி
x

சாலியமங்கலம் பகுதியில் பனி மூட்டம் நிலவுவதால், அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

தஞ்சாவூர்

சாலியமங்கலம் பகுதியில் பனி மூட்டம் நிலவுவதால், அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

விவசாயிகள் அவதி

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, சாலியமங்கலம் அதனை சுற்றியுள்ள பகுதியில் தற்போது குறுவை நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக சாலியமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயில் இன்றி பனிமூட்டமாக காணப்படுகிறது.

அதனால் குறுவை அறுவடை செய்யும் பணியில் மந்த நிலை உள்ளது. மேலும் வெயில் இன்றி வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதால் அறுவடை செய்த நெல்லை காய வைக்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

பாதிப்பு

கடந்த சில நாட்களாக திடீர் மழை பொழிவு மற்றும் பனி மூட்டம் காரணமாக அறுவடை செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு அறுவடை செய்த நெல்லை உலர்த்துவதற்கும் போதுமான வெயில் இல்லாததால் நெல்லை பல நாட்கள் காயவைக்க வேண்டி உள்ளது. நெல்லை காய வைக்கவே அதிக செலவு செய்து வருகிறோம். கொள்முதல் நிலையத்தில் குறுவை நெல்லை ஈரப்பதம் அதிகம் இருப்பதாக கூறி கொள்முதல் செய்ய மறுக்கின்றனர். முன்பெல்லாம் குறுவை நெல்லை ஈரப்பதம் கணக்கிடாமல் உடனுக்குடன் கொள்முதல் செய்வார்கள். மேலும் இருப்பு வைக்காமல் அரவைக்கு அனுப்பி விடுவார்கள். அதுபோல தற்போதும் நெல்லை ஈரப்பதம் கணக்கிடாமல் கொள்முதல் செய்ய வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.


Next Story