திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை: அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாமல் திண்டாடும் விவசாயிகள்


திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை:  அறுவடை செய்த நெல்லை பாதுகாக்க முடியாமல் திண்டாடும் விவசாயிகள்
x
தினத்தந்தி 9 Oct 2022 6:45 PM GMT (Updated: 9 Oct 2022 6:45 PM GMT)

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அறுவடை செய்த நெல்லை மழையில் இருந்து பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகிறார்கள்.

திருவாரூர்

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அறுவடை செய்த நெல்லை மழையில் இருந்து பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் திண்டாடி வருகிறார்கள்.

குறுவை அறுவடை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, பரவாக்கோட்டை, மகாதேவபட்டினம், பஞ்சாங்கம் நாடு, சேரன்குளம், மூவாநல்லூர், பாமணி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மதியம் வரை தொடர்ந்து மழை பெய்தது.

இதனால் நகரில் ஆங்காங்கே சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது. தற்போது குறுவை அறுவடை பணி நடந்து வருவதால் மன்னார்குடி சுற்றியுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை திறந்தவெளியில் குவித்து வைத்து விற்பனைக்காக காத்திருக்கிறார்கள்.

விவசாயிகள் திண்டாட்டம்

இந்த நேரத்தில் மழை பெய்துள்ளதால் விவசாயிகள் நெல்லை பாதுகாக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள். விவசாயிகள் பலர் நெல்லை தார்பாய்களை கொண்டு மூடி வைத்தனர். தார்ப்பாயினால் நெல் மூட்டைகளை ஓரிரண்டு நாட்களுக்கு மட்டுமே மூடி வைத்து பாதுகாக்க முடியும் என்றும், தொடர்ந்து மழை பெய்தால் குவித்து வைக்கப்பட்ட நெல் மழையில் நனைந்து வீணாகும் என்றும் விவசாயிகள் வேதனையுடன் கூறுகிறார்கள்.

தேங்கி உள்ள நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

நீடாமங்கலம்- நன்னிலம்

நீடாமங்கலம், நன்னிலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு பெய்த கனமழையால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது. நன்னிலம் மாப்பிள்ளை குப்பம், பனங்குடி, மகிழஞ்சேரி, குவலைக்கால், சுரக்குடி, மூங்கில்குடி ஆகிய பகுதிகளில் தற்போது சம்பா நெற்பயிர் நடவு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நேரடி விதைப்பு செய்தவர்கள் களை பறிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நேற்று பெய்த மழையின் காரணமாக இந்த விவசாய பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.


Next Story