பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் - கடலூரில் பரபரப்பு


பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் - கடலூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 5 May 2024 6:26 AM GMT (Updated: 5 May 2024 6:50 AM GMT)

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் தனது தந்தை பாலியல் தொல்லை கொடுப்பதாக மகள் புகார் அளித்தார்.

கடலூர்,

கடலூரை சேர்ந்த 45 வயது நபர். இவர் கடலூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். அவர் கடலூர் புதுக்குப்பத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் தங்கி இருந்து பணிக்கு சென்று வருகிறார். இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். அவர் கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அந்த போலீஸ்காரர், தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த மாணவி, தனது தந்தை மீது யாரிடம் புகார் அளிப்பது என்று செய்வதறியாமல் தவித்து வந்தார். இந்த நிலையில் மாணவி, கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமிடம் தனது தந்தை பாலியல் தொல்லை கொடுப்பது பற்றி புகார் அளித்தார்.

இதையடுத்து மாணவியின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், கடலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார், மாணவியின் தந்தையான போலீஸ்காரர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். பெற்ற மகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story