விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்


விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்
x

ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

வேலைநிறுத்தம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க வலியுறுத்தி 3-வது நாளாக ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் 700-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுக கடல் பகுதியில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இதனிடையே மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் எதிரே இன்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் ராமேசுவரம் மீன்துறை அலுவலகத்தில் நேற்று மீன்துறை துணை இயக்குனர் காத்தவராயன் தலைமையில் விசைப்படகு மீனவர்களுடனான சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவர் சங்க பிரதிநிதிகள் என்.ஜே.போஸ், சேசு ராஜா, எமரிட், சகாயம் உள்ளிட்ட ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.

நடவடிக்கை

இந்த கூட்டத்தில் இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை செய்யப்பட்டு உள்ளதாகவும் மீதம் உள்ள மீனவர்களையும் மற்றும் படகுகளையும் விடுதலை செய்ய தேவையான நடவடிக்கையை அரசு எடுத்து வருவதாகவும், இலங்கையில் உள்ள மீனவர்களின் படகுகளுக்கு நிவாரணம் வழங்க அரசு பரிசீலித்து வருவ தாகவும் 144 தடை உத்தரவு உள்ளதால் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டாம் என்றும் மீன் துறை துணை இயக்குனர் கேட்டுக் கொண்டார்.

ஒத்திவைப்பு

மீன் துறை அதிகாரியின் கோரிக்கையை ஏற்று ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்தனர். வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்று உள்ளதாகவும் மீன் பிடிக்க கடலுக்கு செல்வது குறித்து இன்று அல்லது நாளை ஆலோசனை கூட்டம் நடத்தி அதன் பின்னர் முடிவு செய்ய திட்டமிட்டு உள்ளதாக விசைப்படகு மீனவர்கள் தெரிவித்தனர்.


Next Story