அ.தி.மு.க. வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் - ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்


அ.தி.மு.க. வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் - ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம்
x

அ.தி.மு.க. வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதி உள்ளார்.

சென்னை,

ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே மோதல் முற்றியதை தொடர்ந்து அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 11-ந்தேதி நடந்த பொதுக்குழுவில் அவர் தேர்வு செய்யப்பட்டதோடு கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதையடுத்து, அ.தி.மு.கவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பொதுக்குழு நடைபெற்ற சமயத்தில் அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் இடையே மோதல் வெடித்தது. இதன் காரணமாக வருவாய்துறையினர் அதிமுக-வின் தலைமை அலுவலகத்தை மூடி சீல்வைத்து சென்றனர்.

இதையடுத்து, அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை தன்னிடம் தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் விசாரணையின் போது, சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் கரூர் வைஸ்யா, ஸ்டேட் வங்கி, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிக் கணக்குகளை குறிப்பிட்டு தற்போது அ.தி.மு.க.வின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும் என இந்தியன் ரிசர்வ் வங்கிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், அ.தி.மு.கவின் புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்பட்ட முறை அ.தி.மு.க.வின் சட்ட விதிகளுக்கு எதிரானது எனவும் கடந்த 15 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் பொருளாளராக தான் இருந்து வருவதாகவும் ஓ.பன்னீர்செல்வம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அ.தி.மு.க. செயற்குழு பொதுக்குழு தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி இன்றுவரை தான் ஒருங்கிணைப்பாளர்.வங்கிகள் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும் எனவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


Next Story