திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தமிழக கவர்னர் சாமி தரிசனம்


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தமிழக கவர்னர் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 27 May 2022 3:31 PM GMT (Updated: 27 May 2022 3:36 PM GMT)

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு சென்ற கவர்னர் ஆர்.என்.ரவி தியாகராஜர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

திருவாரூர்:

திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் தேசிய கல்வி கொள்கை குறித்த 2 நாட்கள் கருத்தரங்கம் இன்று தொடங்கியது. இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு திருச்சி வந்தார். அங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்திற்கு வந்தார். அங்கு கருத்தரங்கினை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து பேசினார்.

இதனை தொடர்ந்து மாலை 5.45 மணிக்கு திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்கு வந்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.




இதனை தொடர்ந்து தியாகராஜர், வன்மீகநாதர், கமலாம்பாள் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அப்போது திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், உதவி கலெக்டர் பாலச்சந்திரன், அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன், கோவில் செயல் அலுவலர் கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி திருவாரூரில் இருந்து காரில் திருச்சிக்கு புறப்பட்டார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.


Next Story