இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால்... ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை


இ-பாஸ் முறையை ரத்து செய்யாவிட்டால்... ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை
x

கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட உள்ளது.

கொடைக்கானல்,

சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி, வருகிற 7-ந்தேதி முதல் கொடைக்கானலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கு கொடைக்கானல்வாசிகள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் கொடைக்கானல் ஓட்டல், ரிசார்ட் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் அங்குள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்ட முடிவில் சங்க தலைவர் நிருபர்களிடம் கூறுகையில்;

"கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு மேல்முறையீடு செய்து தடை உத்தரவு பெற வேண்டும். இதுதொடர்பாக 6-ந்தேதி (நாளை) கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.

இதில் சுமுக உடன்பாடு ஏற்படாவிட்டால் அனைத்து தங்கும் விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க மாட்டோம். அங்கு உணவு வழங்க மாட்டோம். அனைத்து சங்கங்களையும் கூட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவோம். இதேபோல் கொடைக்கானலில் கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் நியமிக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து மனு கொடுக்க இருக்கிறோம்" என்றார்.


Next Story