கோவிலாங்குளம் ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடு:வார்டு உறுப்பினர்கள் 6 பேர் ராஜினாமா - கலெக்டரிடம் கடிதம் கொடுத்ததால் பரபரப்பு


கோவிலாங்குளம் ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடு:வார்டு உறுப்பினர்கள் 6 பேர் ராஜினாமா  - கலெக்டரிடம் கடிதம் கொடுத்ததால் பரபரப்பு
x

கோவிலாங்குளம் ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக கூறி வார்டு உறுப்பினர்கள் 6 பேர் ராஜினாமா கடிதத்தை கலெக்டரிடம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை


கோவிலாங்குளம் ஊராட்சி நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக கூறி வார்டு உறுப்பினர்கள் 6 பேர் ராஜினாமா கடிதத்தை கலெக்டரிடம் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவிலாங்குளம் ஊராட்சி

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோவிலாங்குளம் ஊராட்சி மன்ற தலைவராக ஜெயந்தி என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் கோவிலாங்குளம் ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் 100 நாட்கள் வேலை திட்டம், சாலை அமைத்தல் உள்ளிட்ட அரசு திட்ட பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம், ஊராட்சிமன்ற கூட்டம் முறைகேடாக நடத்துவது, விளை நிலங்களை வீட்டு மனைகளாக மாற்ற லஞ்சம் பெறப்படுவதாகவும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

மேலும் இந்த முறைகேட்டில் ஈடுபடும் ஊராட்சி செயலாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பேசியுள்ளனர். அவ்வாறு பேசியவர்களை தகுதி நீக்கம் செய்வதாக ஊராட்சிமன்ற தலைவரின் கணவரும் தி.மு.க. செல்லம்பட்டி ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவராகவும் உள்ள முத்துராமன் தங்களை மிரட்டுவதாக கூறி வார்டு உறுப்பினர்கள் தனம் (1-வது வார்டு), ஜெயலட்சமி (2-வது வார்டு), ஜெயக்கொடி (3-வது வார்டு) பஞ்சு (4-வது வார்டு), தங்கசாமி (9-வது வார்டு), பாண்டியராஜன் (12-வது வார்டு) ஆகியோர் நேற்று காலை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

விசாரணை நடத்த உத்தரவு

பின்னர் அவர்கள் தங்கள் வார்டு பதவிகளை ராஜினாமா செய்வதாக கூறி கடிதத்தை கலெக்டர் சங்கீதாவிடம் வழங்கினர். இதையடுத்து அதை விசாரித்த கலெக்டர், மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி கூடுதல் இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

பின்னர் வார்டு உறுப்பினர்கள் நிருபர்களிடம் கூறும் போது, ஊராட்சி நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது. இது குறித்து கேள்வி எழுப்பினால் தகுதி நீக்கம் செய்வதாக கூறி ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுகிறார். மேலும் ஊராட்சிமன்ற நிர்வாகத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் கணவரான தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துராமன் தலையிட்டு வார்டு உறுப்பினர்களை மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.

ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 6 பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தை கலெக்டரிடம் வழங்கிய சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது.


Related Tags :
Next Story