ரூ.124 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள்


ரூ.124 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகள்
x

மணிகண்டம் அருகே ரூ.124 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் கே.என்.ேநரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

திருச்சி

மணிகண்டம் அருகே ரூ.124 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர் கே.என்.ேநரு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள்

மணிகண்டம் மற்றும் அந்தநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 174 ஊரக குடியிருப்புகளுக்கான ரூ.124 கோடியில் செயல்படுத்தப்பட உள்ள காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட பணிக்கான அடிக்கல் நாட்டு விழா, சேதுராப்பட்டியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கூட்டுறவு பால் கொள்முதல் நிலைய புதிய கட்டிடம் திறப்பு விழா ஆகிய விழாக்கள் மணிகண்டம் அருகே உள்ள சேதுராப்பட்டியில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய தலைமை பொறியாளர் முரளி வரவேற்று பேசினார்.

விழாவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கூட்டு குடிநீர் திட்ட பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரத்தில் இடுபொருட்களை வழங்கியும், கள்ளிக்குடி, அல்லித்துறை, இனாம்குளத்தூர், சோமரசம்பேட்டை, அதவத்தூர், நாச்சிகுறிச்சி ஆகிய ஊராட்சிகளுக்கு குப்பை கொண்டு செல்வதற்கான புதிய டிராக்டர் வண்டிகளை வழங்கியும் பேசினார். அப்போது அவர் கூறும்போது, மணிகண்டம் மற்றும் அந்தநல்லூர் ஒன்றியங்களை சேர்ந்த 124 ஊரக குடியிருப்புகளுக்கு காவிரி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு குடிநீர் வழங்க ரூ.124.13 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் ஜல்ஜீவன் மிஷன் மூலம் நிறைவேற்றப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மணிகண்டம் ஒன்றியத்தை சார்ந்த 166 குடியிருப்புகளும் அந்தநல்லூர் ஒன்றியத்தை சார்ந்த 8 குடியிருப்புகளும் ஆக மொத்தம் 174 குடியிருப்புகள் மூலம் ஒரு லட்சத்து 97 ஆயிரம் மக்கள் பயனடைவார்கள் என்றார்.

விழாவில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் வைரமணி, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ. பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றிய குழு தலைவர் கமலம்கருப்பையா, மணிகண்டம் ஒன்றிய தி.மு.க. செயலாளர் மாத்தூர் கருப்பையா, ஒன்றிய கவுன்சிலர் அருணாச்சலம், ஊராட்சி மன்ற தலைவர்கள் வசந்தா தங்கரத்தினம் (சேதுராப்பட்டி), சுந்தரம் (கள்ளிக்குடி), எமல்டா லில்லிகிரேசி ஆரோக்கியசாமி (அளுந்தூர்), ஜி.வி.சரவணன் (அல்லித்துறை), வெள்ளையம்மாள் பழனிச்சாமி (இனாம்குளத்தூர்), சேதுராப்பட்டி ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்னம்மாள் பிச்சைமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பிராட்டியூர் குளம் தூர்வாரும் பணி

முன்னதாக திருச்சி பிராட்டியூர் குளத்தை தூர்வாரும் பணியை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி ைவத்தார். இந்தநிகழ்ச்சியில் தி.மு.க. பகுதி செயலாளர் மோகன்தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ரூ.7 கோடியில் தாய்சேய் நல மைய கட்டிடம்

இதேபோல் லால்குடி அரசு மருத்துவமனையில் ரூ.7 கோடியில் புதிய தாய் சேய் நல மைய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜையை அமைச்சர் தொடங்கி வைத்தார். இதேபோல் திருச்சி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று தொடங்கிவைத்தார்.

திருச்சி தென்னூர் குழுமிக்கரை பகுதியில் கட்டப்பட்டுள்ள புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்த அமைச்சர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறும்போது, திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான வளர்ச்சிதிட்ட பணிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம். சென்னையில் மழை காலங்களில் தொடங்கப்பட்ட சில பணிகள் முடிவு பெறாமல் உள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையின் செயலர் முடிக்கப்படாத பணிகள் குறித்து தெரிவித்துள்ளார். முதல்-அமைச்சரும் அந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளார். அந்த பணிகளில் முதலில் முடிக்க வேண்டிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து முடிக்கப்படும் என்றார்.


Next Story