கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவை தாக்கல் ஐகோர்ட் உத்தரவு


கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு: சுப்ரீம் கோர்ட் உத்தரவை தாக்கல் ஐகோர்ட் உத்தரவு
x

கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை தாக்கல் செய்யுமாறு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளியில் மர்ம மரணம் அடைந்த மாணவியின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தங்கள் தரப்பு மருத்துவக் குழு மூலம் மறுபிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்ற மாணவியின் தந்தை முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், சென்னை ஐகோர்ட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற மாணவியின் தந்தை சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு இன்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மறுபிரேத பரிசோதனை தொடர்பான கோரிக்கைகளை சென்னை ஐகோர்ட்டிலே வைக்கலாம் என தெரிவித்ததோடு, மனுவை தள்ளுபடி செய்யப்போவதாக கூறினர். அப்போது மாணவியின் தந்தை தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. மனுவை வாபஸ் பெற அனுமதியளித்த நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா முறையீடு செய்தார். அப்போது "மறு உடற்கூறாய்வு செய்யப்பட்ட மாணவியின் உடலை பெற்றோர் வாங்க மறுப்பதாகவும், உடலை வாங்க அவர்களுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து, அவசரம் கருதி விசாரிக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்று நீதிபதி வழக்கை விசாரித்தபோது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கோர்ட் உத்தரவுப்படி மறு உடற்கூறாய்வு முடிக்கப்பட்ட பிறகும்கூட, மாணவியின் உடலை அவரது பெற்றோர் இன்னும் பெற்று கொள்ளவில்லை. கோர்ட் உத்தரவுப்படி தான் அனைத்து நடைமுறைகளும் பின்பற்றப்பட்டன. சுப்ரீம் கோர்டில் தொடரப்பட்ட வழக்கையும் மனுதாரர் வாபஸ் பெற்றுவிட்டது" என்று தெரிவித்தார்.

மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கரசுப்பு, கோர்ட் உத்தரவை மீறி பெற்றோர் மற்றும் வழக்கறிஞர் இல்லாமலேயே மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், தங்கள் தரப்பு மருத்துவர்கள் கொண்டு மறு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்த போது, ஐகோர்ட்டை அணுகலாம் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இன்று உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை தாக்கல் ஐகோர்ட்டில் செய்யுமாறு உத்தரவிட்டு வழக்கை நாளைக்கு(ஜூலை 22) ஒத்திவைத்தார்.


Next Story