கள்ளக்குறிச்சி: டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி - 7 பேர் படுகாயம்


கள்ளக்குறிச்சி: டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி - 7 பேர் படுகாயம்
x

உளுந்தூர்பேட்டை அருகே டிராக்டர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளிகள் 6 பேர் கலவை எந்திரம் பூட்டிய டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் கெடிலம் ஆற்று பாலம் வழியாக சென்றபோது பின்னால் வந்த அரசு பஸ் டிராக்டர் மீது அதிவேகமாக மோதியது.

இந்த விபத்தில் கலவை எந்திரம் மற்றும் டிராக்டர் முற்றிலும் உருகுளைந்தது. அதில் இருந்த கட்டிடத் தொழிலாளர்கள் வசந்தகுமார்(25), நாவலேரிஅம்மாள்(45) ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வெற்றிவேல்(45), நாகராஜ் (45), ரேவதி (35), மகேஸ்வரி (30), பஸ் பயணிகள் சுப்பிரமணி(67), கார்த்தி மணி(65), முத்து (45) உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்த தகவல் அறிந்தவந்த உளுந்தூர்பேட்டை போலீசார் காயம் அடைந்தவர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் மற்றும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த 2 தொழிலாளர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர்.

தற்போது விபத்து தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story