கன்னியாகுமரி: குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்


கன்னியாகுமரி: குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிரம்
x
தினத்தந்தி 20 July 2023 8:56 AM GMT (Updated: 20 July 2023 9:42 AM GMT)

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

குமரி,

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே முக்கறைக்கல் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் கடந்த சில நாட்களாக புலி அட்டகாசம் செய்து வருகிறது. அங்குள்ள ஆடு, மாடுகளை கடித்து கொன்று வருகிறது. குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து நாய், ஆடுகளை கொன்றதால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் புலியை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். 2 இடங்களில் கூண்டு அமைத்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். ஆனால் புலி சிக்கவில்லை.

இந்த நிலையில் புலியை பிடிக்க புது வியூகம் வகுத்து வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மாவட்ட வன அதிகாரி இளையராஜா தலைமையிலான குழுவினர் நேற்று அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்களை சந்தித்து பேசினார்கள். அப்போது ஆடு, மாடுகளை ஆங்காங்கே கட்டுவதால் புலிகள் கடித்து கொன்று வருகிறது.

இதையடுத்து சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் காம்பவுண்டின் உள்பகுதியில் ஆடு, மாடுகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 20 மாடுகள், 40 ஆடுகள் ஒரே இடத்தில் கட்டப்பட்டு உள்ளன. அந்த பகுதியை வனத்துறை அதி காரிகள் கண்காணித்து வருகிறார்கள். மேலும் புலியை பிடிக்கும் வகையில் ஆட்டுக்கொட்டகை போன்ற தோற்றம் உடைய கூண்டு ஒன்றை வடிவமைத்து 2 இடங்களில் வைத்துள்ளனர். அந்த கூண்டுக்குள் 2 ஆடுகளையும் கட்டி வைத்துள்ளனர். 24 மணி நேரமும் அந்த கூண்டை வனத்துறை கண்காணித்து வருகிறார்கள்.

புலி பிடிப்பதற்கு வெளியூரிலிருந்து சிறப்பு குழுவினரை அழைத்து வரவும் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவையில் இருந்து புலியை பிடிப்பதற்கு பயிற்சி பெற்ற குழுவினர் விரைவில் இங்கு வர உள்ளனர். அவர்கள் குமரி மாவட்ட வனத்துறையினருடன் இணைந்து புலியை பிடிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளனர்.


Next Story