ஆவடி அருகே ரூ.34 லட்சம் மோசடி செய்த வழக்கில் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாட்கள் சிறை


ஆவடி அருகே ரூ.34 லட்சம் மோசடி செய்த வழக்கில் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாட்கள் சிறை
x

ஆவடி அருகே ரூ. 34 லட்சம் மோசடி செய்த வழக்கில் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு 15 நாட்கள் சிறையில் அடைக்க அம்பத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திருக்கோவில் பெயரை பயன்படுத்தி, இணையதளம் மூலம் 44 லட்சம் ரூபாய் வசூல் செய்த புகாரில் இளைய பாரதம் யூடியூப் சேனல் உரிமையாளர் கார்த்திக் கோபிநாத், ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் இன்று காலை அவரது அலுவலகத்தில் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் ஆலய செயல் அலுவலர் அரவிந்தன் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஆவடி மிட்னமல்லியை சேர்ந்த யூடிப்பர் கார்த்திக் கோபிநாத் என்பவரை ஆவடி மத்திய குற்றவியல் போலீசார் கைது செய்தனர். குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள், உதவி ஆணையர் கந்தக்குமார் ஆகியோர் அவரிடம் சுமார் 6 மணி நேரம், ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் கார்த்திக் கோபிநாத் மீது 420, 406 மற்றும் 66(டி) தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதியப்பட்டு முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில், ஜுன் 13-ம் தேதி வரை கார்த்திக் கோபிநாத்தை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க அம்பத்தூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கார்த்திக் கோபிநாத் கைதை அடுத்து அவரது ஆதரவாளர்களான பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதர், பாஜக விளையாட்டு துறை மேம்பாட்டு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் அஸ்வின் தலைமையில் ஏராளமானோர் ஆவடி காவல் ஆணையரகத்தில் குவிந்து கலைந்து சென்றனர். அதனைத்தொடர்ந்து அம்பத்தூர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த யூடியூப் கார்த்தி கோபிநாத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றபோது ஏராளமான பாஜகவினர் அம்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story