2 வாலிபர்களுக்கு ஆயுள் சிறை


2 வாலிபர்களுக்கு ஆயுள் சிறை
x
சேலம்

80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 வாலிபர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள பெரியசோரகை, தேங்காய் கொட்டாய், முசரன் வலவு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. இவருடைய மகன் சீனிவாசன் (வயது 20). அதே பகுதியை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம். இவரது மகன் விக்னேஷ் (23). இருவரும் கூலி தொழிலாளர்கள். வாலிபர்கள் 2 பேரும் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந்தேதி, தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த 80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்ட மூதாட்டி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். தகவல் அறிந்த ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா. மூதாட்டியிடம் வாக்குமூலம் பெற்றார். பின்னர் அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து சீனிவாசன், விக்னேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தார்.

ஆயுள் சிறை தண்டனை

இந்த வழக்கு சேலம் மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சீனிவாசன், விக்னேஷ் ஆகிய 2 பேருக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு அளித்தார். மேலும் 2 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ஆயுள் சிறை தண்டனை பெற்ற 2 பேரையும், போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், இந்த வழக்கு விசாரணை அதிகாரியான போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராவை பாராட்டினார்.


Next Story