மாவயல் காட்டு அய்யனார் கோவில் தேரோட்டம்


காரையூர் அருகே மாவயல் காட்டு அய்யனார் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

தேரோட்டம்

காரையூர் அருகே உள்ள கீழத்தானியத்தில் பிரசித்தி பெற்ற மாவயல் காட்டு அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 20-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து மண்டகப்படிதாரர்கள் சார்பில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அய்யனாரை தேரில் எழுந்தருள செய்தனர். பின்னர் மேளதாளம் முழங்க வாண வேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மஞ்சள் நீராட்டு விழா

முக்கிய வீதிகளின் வழியாக தேர் அசைந்தாடி வந்தது. ஒவ்வொரு வீதியிலும் பக்தர்கள் கூடி நின்று தேங்காய், பூ, பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர். பின்னர் தேர் நிலையை வந்தடைந்தது. பின்னர் சுவாமிக்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. இதில் கீழத்தானியம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணிகளில் காரையூர் போலீசார் ஈடுபட்டனர்.


Next Story