மஞ்சளாறு அணை நீர்மட்டம் 53 அடியை எட்டியது; 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை


மஞ்சளாறு அணை நீர்மட்டம் 53 அடியை எட்டியது; 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 27 Sep 2023 9:00 PM GMT (Updated: 27 Sep 2023 9:01 PM GMT)

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியதை அடுத்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேனி

தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியதை அடுத்து 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சளாறு அணை

தேவதானப்பட்டி அருகே 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணை உள்ளது. இந்த அணையின் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 259 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக அக்டோபர் மாதம் 15-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வரை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் அணைக்கு நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இதற்கிடையே கடந்த சில வாரங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. சமீபத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் மஞ்சளாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்தது.

வெள்ள அபாய எச்சரிக்கை

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியதும் முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 53 அடியை எட்டியதும் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 55 அடியை எட்டியதும் 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்படுகிறது. அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 51 அடியை எட்டியது. அப்போது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்று மதியம் அணையின் நீர்மட்டம் 53 அடியை எட்டியது. அதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறையினர் சார்பில் கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 117 கன அடியாக உள்ளது. நீர் திறப்பு இல்லை.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 57 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story