'மேகதாது அணை விவகாரம்; மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்?' - ராமதாஸ் கேள்வி


மேகதாது அணை விவகாரம்; மு.க. ஸ்டாலின் வாயை திறக்காதது ஏன்? - ராமதாஸ் கேள்வி
x

மேகதாது அணை தொடர்பான டி.கே.சிவகுமாரின் பேச்சை கண்டிக்காமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? என ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை,

காவிரியின் குறுக்கே மேகதாது அணையை நல்ல வழியிலோ, மோசடி செய்தோ கட்டியே தீருவோம் என கர்நாடக துணை முதல்-மந்திரியும், அம்மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே.சிவக்குமார் பேசியிருப்பதாகவும், அதைக் கண்டிக்காமல் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? என்றும் பா.ம.க. தலைவர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பெங்களூரு (ஊரகம்) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் தமது சகோதரர் டி.கே.சுரேஷை ஆதரித்து அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகளிடம் பரப்புரை மேற்கொண்ட கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், 'உங்களுடன் நான் பிசினஸ் டீல் பேச வந்திருக்கிறேன். நீங்கள் எனது சகோதரர் சுரேஷை வெற்றி பெறச் செய்தால், அவர் உங்களுக்கு காவிரியிலிருந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வார்' என்று பேசியிருக்கிறார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவக்குமார், 'நல்லவழியிலோ அல்லது மோசடி செய்தோ மேகதாது அணையைக் கட்டி, அங்கிருந்து பெங்களூரு நகருக்கு குடிநீர் கொண்டு வருவோம் என்பதை அங்குள்ள மக்களுக்கு தெரிவிப்பதற்காகவே அவ்வாறு கூறினேன்' என்று விளக்கமளித்துள்ளார்.

மேகதாது அணை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் சூழலில், மோசடி செய்தாவது மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார் கொக்கரிக்கிறார் என்றால், அணையை கட்டும் விஷயத்தில் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவும், துணை முதல்-மந்திரி டி.கே.சித்தராமையாவும் மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது மட்டுமின்றி, தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவுக்கு வேட்டு வைக்கும் செயலாகும். இதை தமிழர்களால் சகித்துக் கொள்ள முடியாது.

மேகதாது அணை விவகாரத்தில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அமைதியை வைத்துப் பார்க்கும் போது, தமிழ்நாடு அரசை அமைதிப்படுத்திவிட்டு, மேகதாது அணையை கட்டுவதைத் தான், மோசடி வழியிலாவது பெங்களூருக்கு தண்ணீர் கொண்டு செல்வது என்று டி.கே.சிவக்குமார் கூறுகிறாரோ? என்ற ஐயம் எழுகிறது.

தி.மு.க. அரசோ, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோ இந்த ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதுதான் வருத்தமளிக்கும் உண்மை. 1970-ம் ஆண்டுகளில் கலைஞர் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில்தான் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகள் கட்டப்பட்டன. ஆனாலும், அவரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழகத்தின் உரிமைகளை தாரைவார்த்து காவிரியின் குறுக்கே அணைகள் கட்டப்படுவதை கண்டுகொள்ளாமல் இருந்தார்.

2008-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரசுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அப்போதைய முதல்-அமைச்சர் கலைஞர் நிறுத்தி வைத்தார். அவர் வழியில் வந்த மு.க.ஸ்டாலின், இப்போது மேகதாது அணை கட்டும் விவகாரத்தில், கர்நாடகத்துக்கு ஆதரவாக தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்.

காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை திமுக அரசு அடகு வைத்து விடக் கூடாது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதல்-மந்திரி சித்தராமையா ஆகியோரை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.


Next Story