மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
மேட்டூர்:
தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில வாரங்களாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு 47 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தது. இதன் எதிரொலியாக அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து 117 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அணையில் இருந்து டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து வைத்தார்.
நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 10 ஆயிரத்து 508 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து நேற்று காலை வினாடிக்கு 8 ஆயிரத்து 539 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 117.92 அடியாக இருந்தது.