முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 140 அடியாக உயர்வு: கேரள மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை


முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 140 அடியாக உயர்வு:  கேரள மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:46 PM GMT)

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்ததால் கேரள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

தேனி

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகிறது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 152 அடி ஆகும். மத்திய நீர் வள ஆணைய அமலாக்கத்தின் ரூல்கர்வ் முறை படி இந்த மாதம் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் 31-ந்தேதி வரை 142 அடி வரை தண்ணீர் தேக்கி கொள்ள சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதன்படி, நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 139.55 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து வினாடிக்கு 2,001 கன அடியாகவும், வெளியேற்றம் வினாடிக்கு 511 கனஅடியாகவும் உள்ளது.

நீர்வரத்து அதிகரித்ததால் மாலை 6 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 140 அடியாக உயர்ந்தது. இதனால் தமிழக பொதுப்பணித்துறையினர் வல்லக்கடவு, சப்பாத்து உள்ளிட்ட கேரள பகுதி மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.


Related Tags :
Next Story