கூடலூர் அருகே வைரவன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை


கூடலூர் அருகே  வைரவன் வாய்க்கால் பாலத்தில் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும்:  விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 29 Nov 2022 6:45 PM GMT (Updated: 29 Nov 2022 6:46 PM GMT)

கூடலூர் அருகே வைரவன் வாய்க்கால் பாலத்தின் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

தேனி

கூடலூரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் கழுதை மேடு புலம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் விவசாயிகள் நிலக்கடலை, எள், தட்டைப்பயிறு, அவரை, மொச்சை உள்ளிட்ட பல்வேறு பயிர்களை மானாவாரியாக சாகுபடி செய்து வருகின்றனர். இவர்கள் கூடலூரில் இருந்து லோயர்கேம்ப் புதுரோடு பகுதி வரை பஸ்சில் வருகின்றனர். பின்னர் அங்கிருந்து முல்லைப்பெரியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள வைரவன் வாய்க்கால் பாலம் வழியாக தங்கள் விளை நிலங்களுக்கு நடந்து செல்வார்கள்.

அங்கு விவசாயப் பணிகள் முடிந்த நிலையில் மீண்டும் அந்த பாலம் வழியாக நடந்து கூடலூருக்கு செல்வார்கள். இந்த வைரவன் வாய்க்கால் பாலம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. பின்னர் அதன் உரிய பராமரிப்பு இல்லாத நிலையில் பாலத்தில் இரும்பினால் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் அனைத்தும் துருப்பிடித்து பெயர்ந்து விழுந்தன. ஆனால் பொதுப்பணித்துறையினர் அதனை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் தங்கள் விளைநிலங்களுக்கு பாலம் வழியாக விவசாயிகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. காற்று வேகமாக வீசினால் கூட தவறி ஆற்றில் விழும் அபாயம் உள்ளது. எனவே வைரவன் வாய்க்கால் பாலத்தில் சேதம் அடைந்த தடுப்பு கம்பிகளை அமைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story