நாமக்கல் மாவட்டத்தில், 7 மையங்களில் நீட் தேர்வை 4,871 மாணவ, மாணவிகள் எழுதினர்


நாமக்கல் மாவட்டத்தில், 7 மையங்களில்  நீட் தேர்வை 4,871 மாணவ, மாணவிகள் எழுதினர்
x

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 7 மையங்களில் நீட் தேர்வை 4,871 மாணவ, மாணவிகள் எழுதினர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 7 மையங்களில் நீட் தேர்வை 4,871 மாணவ, மாணவிகள் எழுதினர்.

நீட் தேர்வு

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2022-23-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (நீட் தேர்வு) நேற்று நடைபெற்றது.

இத்தேர்வுக்காக நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் டிரினிடி இன்டர் நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளி, பாவை என்ஜினீயரிங் கல்லூரி, தி ஸ்பெக்ட்ரம் அகாடமி, பல்லக்காபாளையம் ராயல் இன்டர்நெஷனல் பள்ளி, கே.எஸ்.ஆர். அக்ஷரா அகாடமி, தி நவோதயா அகாடமி சீனியர் செகண்டரி பள்ளி, நேஷனல் பப்ளிக் பள்ளி என 7 மையங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த மையங்களில் தேர்வு எழுத 5,143 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 4,871 பேர் தேர்வு எழுதியதாகவும், மீதமுள்ள 272 மாணவ, மாணவிகள் தேர்வுக்கு வரவில்லை எனவும் தேசிய தேர்வு முகமை அலுவலர்கள் தெரிவித்தனர். மாணவ, மாணவிகளின் வருகை சதவீதம் 94.71 ஆகும்.

உடல் வெப்பநிலை பரிசோதனை

தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கினாலும், காலை 11 மணிக்கே தேர்வு மையத்திற்கு மாணவ, மாணவிகள் வர தொடங்கினர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பிறகே மாணவ, மாணவிகள் மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து மாணவர்களுக்கும் முககவசம், கிருமிநாசினி திரவம் போன்றவை மையத்திலேயே வழங்கப்பட்டது.

இதுதவிர கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் தேர்வர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிக அளவில் விதிக்கப்பட்டு இருந்தன. தீவிர சோதனைக்கு பிறகே மாணவ, மாணவிகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். கைக்கெடிகாரம், ஷூ அணியவும், செல்போன், கால்குலேட்டர், காகிதங்கள், பேனா உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

அதேபோல் மாணவர்கள் முழுக்கை சட்டை அணியவும், மாணவிகள் துப்பட்டா அணியவும் தடை விதிக்கப்பட்டது. மேலும் மாணவிகள் கொலுசு, கம்மல், செயின் உள்ளிட்ட அணிகலன்களை அணியவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் மாணவிகள் தாங்கள் அணிந்து வந்திருந்த அணிகலன்கள் மற்றும் துப்பட்டாவை அவசர, அவசரமாக கழற்றி பெற்றோரிடம் கொடுத்து சென்றனர்..

போலீஸ் பாதுகாப்பு

இந்த தேர்வு மதியம் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. அதுவரை மாணவ, மாணவிகளுடன் பாதுகாப்புக்காக வந்திருந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அந்தந்த தேர்வு மையங்கள் அருகே காத்திருந்தனர். பெரும்பாலான மையங்களில் அவர்களுக்கு போதுமான அடிப்படை வசதி இல்லாததால் கடும் அவதி அடைந்தனர். அனைத்து தேர்வு மையங்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. காலை 11 மணிக்கே மையத்திற்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதால் மதிய உணவு சாப்பிடாமல் பட்டினியுடன் தேர்வு எழுத நேரிட்டதாக பெற்றோர் குற்றம்சாட்டினர்.


Next Story