நீட் தேர்வில் தேர்ச்சி:235 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர தகுதி


நீட் தேர்வில் தேர்ச்சி:235 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர தகுதி
x
தினத்தந்தி 17 Jun 2023 6:45 PM GMT (Updated: 17 Jun 2023 6:46 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் 235 பேர் தேர்ச்சியடைந்து மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

நீட் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளில் நீட் தேர்வை 481 பேர் எழுதினர். அதில் 235 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அதன்படி அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மாதவன் 536 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், காளிங்காவரம் மாணவி கல்பனா 462 மதிப்பெண்கள் பெற்று 2-வது இடத்தையும், யு.மிட்டப்பள்ளி மாணவர் விழிவர்மா 442 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தையும் பிடித்தனர். நெடுங்கல் மாணவர் சபரி 425 மதிப்பெண்கள் பெற்று 4-வது இடத்தையும், கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி இந்துமதி 376 மதிப்பெண்கள் பெற்று 5-வது இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

பாராட்டு

இதேபோல் கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அரசம்பட்டி, காவேரிப்பட்டணம், மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, குன்னத்தூர், ஓசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் பயின்ற மாணவிகள் 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

இதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சேர்க்கைக்கான உள் ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் அதிக அளவிலான மாணவர்கள் இளநிலை மருத்துவ படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மாணவ, மாணவிகளை அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி வருகின்றனர்.


Next Story