அரசியலுக்கு தகுதி அற்றவர் ஓ.பன்னீர்செல்வம் - கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு


அரசியலுக்கு தகுதி அற்றவர் ஓ.பன்னீர்செல்வம் - கே.பி.முனுசாமி குற்றச்சாட்டு
x

அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புளியஞ்சேரி கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சரும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளருமான கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது,

ஓ.பன்னீர்செல்வம், எங்களை ஒன்றாக செயல்படலாம் வாருங்கள் என அழைக்கிறார். அப்படி அழைப்பதற்கு அவருக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. இந்த இயக்கத்தில் ஒரு சாதாரண தொண்டனாக இருந்தவர். இந்த இயக்கத்திற்கு எந்த விதமான தியாகமும் செய்யாதவர்.

ஓ.பன்னீர்செல்வம் அரசியலில் இருப்பதற்கே தகுதி அற்றவர் என கூற நான் கடமைப்பட்டுள்ளேன். அவர், ஜெயலலிதா மறைவிற்கு பின், சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை எந்தவித சூழ்நிலையிலும் இந்த கட்சியில் சேர்த்துவிட கூடாது. நான் உயிருள்ள வரை அவர்களை சேர்க்க விடமாட்டேன். இதே போல் டி.டி.வி..தினகரன் ஒரு மாயமான், அவரைப்பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்று கூறிய அவர் பல்வேறு காலக் கட்டங்களில் தன்நிலையை மாற்றி பேசி சுயநலவாதியாகவும், சந்தர்ப்பவாதியாகவும் இருந்துள்ளார்.

ஓ. பன்னீர்செல்வம் ஒரு இயக்கத்தில் கடுமையாக போராடி, பல சோதனைகளை சந்தித்து, பல அவமானங்களை சந்தித்து,அவற்றை வென்றெடுத்து இந்த நிலைக்கு வந்திருந்தால் அவர் தெளிவான முடிவெடுக்க வாய்ப்புள்ளது. அவர் ஒருவர் பின்னாலே இருந்து வந்தவர். அவர் சொல்வதை கேட்டு கேட்டு செயல்பட்டவர். சுய சிந்தனை இல்லாதவர். அந்த சுய சிந்தனை இல்லாதவர் இப்படி தான் பேசுவார்.

அவருக்கு சுயமாக சிந்திக்க தெரிகிறதோ இல்லையோ, சுய நலக்காரராக இருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சுய நலத்திற்காக கட்சியையும், கட்சி தலைமையையும் பயன்படுத்தி உள்ளார். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நபரை விமர்சிக்க கூட நாங்கள் வெட்கப்படுகிறோம்.

இவ்வாறு கே.பி.முனுசாமி கூறினார்.


Next Story